யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட்டையே நிறுத்துவதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இண...
யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட்டையே நிறுத்துவதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று யாழில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது, யாழ் மாநகரசபை முதல்வர் மற்றும் நல்லூர் பிரதேசசபை தவிசாளராக யாரை களமிறக்குவதென்பது குறித்து ஆராயப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஆனல்ட் முதல்வராக நீடிப்பதில் யாரும் அதிருப்தி தெரிவிக்கவில்லை. இதனால் அவரையே வேட்பாளராக களமிறக்குவதென முடிவானது. நாளை இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
நல்லூர் பிரதேசசபையில் நீண்ட இழுபறி ஏற்பட்டுள்ளது. நேற்று அது குறித்து இணக்கம் ஏற்படவில்லை. இதேவேளை, யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இமானுவேல் ஆனல்ட்டை தவிர்த்து, சொலமன் சிறிலை களமிறக்குமாறு மாவை சேனாதிராசாவிடம், எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். மாநகரசபை தேர்தல் முடிந்த கையோடு, சொலமன் சிறிலை முதல்வராக்க மாவை சேனாதிராசா முயற்சித்தார். எனினும், ஆனல்ட் அப்போது சுமந்திரன் குழுவில் இருந்தார். தனது குழுவிலுள்ளவர்களை கரை சேர்த்து விடும் வழக்கத்தின் அடிப்படையில், ஆனல்ட்டை அப்போது முதல்வராக்கியமை குறிப்பிடத்தக்கது.