வடமாகாணத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகளைக் தடுக்கும் நோக்குடன் 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை அபயம் அறக்கட்டளை சார்பில் ...
வடமாகாணத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகளைக் தடுக்கும் நோக்குடன் 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை அபயம் அறக்கட்டளை சார்பில் நல்லூரில் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை(02) பிற்பகல்-06.30 மணி முதல் நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கலந்து கொண்டு இலவச தொலைபேசி சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.
இதற்கமைய தற்கொலை மன நிலையிலுள்ளவர்கள் 0710712345 எனும் தொலைபேசி இலக்கத்துடன் வடமாகாணத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் தொடர்பு கொள்ள முடியும். தற்கொலை மனநிலையிலுள்ளவர்களுடன் மாத்திரமன்றி இவ்வாறான மன நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் அறிந்த நண்பர்கள் மற்றும் உறவுகளும் தொடர்பு கொள்ள முடியும்.
பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவபீட மாணவர்கள், பரீட்சைப் பெறுபேறுகள் காரணமாகத் தற்கொலை செய்கின்ற மாணவர்கள், குடும்பத்திலிருந்து கொண்டு தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்காமல் கணவனுடன் அல்லது கணவனின் குடும்பத்துடன் ஏற்பட்ட சில தகராறுகளால் வாழ்வையே முடித்துக் கொள்கின்ற குடும்பப் பெண்கள், வாலிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் சமூகத்தில் உள்ளனர்.
தற்கொலை முடிவெடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குற்றுயிராக கொண்டுவரப்பட்ட பலர் இறந்திருக்கிறார்கள். பல மருத்துவர்கள் இவ்வாறான அநியாயமான இழப்புக்களைத் தடுக்க வேண்டும் எனக் கூறிக் கவலைப்பட்டுள்ளனர்.
எத்தனையோ ஆலோசனை நிலையங்கள் வைத்தியசாலைகளில் இயங்கினாலும், தனியார் ஆலோசனை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் இவற்றைப் பூரணமாக கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்தச் சூழ்நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.
இதற்காக இலண்டன் அபயம் மருத்துவமனை தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் பணிகளுக்காக சில வைத்தியர்களை நியமித்து இந்தப் பணியை ஊக்குவித்திருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான, வாழ்க்கைக்குத் தேவையான பணி.
ஒருகாலத்தில் கிராமங்களில் மக்கள் மற்றவர்களிடம் ஆலோசனைகள் கேட்கும் வழக்கமிருந்தது. வயதுக்கு மூத்தோர்கள் சொல்லைக் கேட்டல் அல்லது தமது நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் உரையாடுவதன் மூலம் அவர்களின் மனநிலைகளை அறிந்து கொள்வார்கள். அல்லது அயலிலுள்ளவர்கள் மற்றும் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு தங்க கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இன்றைய இயந்திரமயமான சூழலில் எல்லோரும் கைத்தொலைபேசிகளுடனும், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகளுடனும் நேரத்தைச் செலவழிக்கின்றமையால் மனிதர்களுடன் தங்கள் இன்ப, துன்பங்களை நேரடியாகப் பகிர்ந்து கொள்வது, தெய்வத் தலங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் மனங்களை ஆற்றிக் கொள்வது எல்லாம் தற்போது மிகக் மிகக் குறைவு.
மேலைநாடுகளில் பல பேருடைய உயிர்களைக் காப்பாற்றும் இந்த முறை காணப்படுகின்றது. இதனை எங்கள் மண்ணிலும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அபயம் அறக்கட்டளை இந்தப் பணியை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சாத்தியமூர்த்தியும், சில மருத்துவர்களும் ஏற்கனவே கூட்டம் வைத்து அபயத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளனர். இங்கு வருகை தந்துள்ள ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகளும் பாடசாலைகள் தோறும் சென்று தன்னம்பிக்கை தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றி வருகின்றார்.
இதேவேளை, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி மற்றும் அமெரிக்க ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோரும் கலந்து கொண்டு அபயம் அறக்கட்டளை சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சேவைகள் தொடர்பிலும், தற்கொலை தொடர்பில் விழிப்புணர்வுடன் கூடிய வகையிலான கருத்துக்களையும் வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.