தேசியக் கொள்கையென்றால் என்ன, அரசாங்கத்தின் உத்தரவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் வடக்கு ஆளுனரும், யாழ் மாவட்ட எம்.பி அங்கஜன் இராமநாதனும...
தேசியக் கொள்கையென்றால் என்ன, அரசாங்கத்தின் உத்தரவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் வடக்கு ஆளுனரும், யாழ் மாவட்ட எம்.பி அங்கஜன் இராமநாதனும் குழம்பிய சுவாரஸ்ய சம்பவம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுத்தாலும், அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக மாகாண பாடசாலைகளை கையகப்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவலை அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தேசிய பாடசாலையாக்கப்பட்டவையை மீள மாகாண பாடசாலையாக்க முடியாதா என வினவினார்.
ஏனெனில், 1987ஆம் ஆண்டு 13வது திருத்தத்தின்படி கல்வி, சுகாதாரம் மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், அதை மீறி தேசிய பாடசாலையாக்கப்படுவதாகவும், பகிரப்பட்ட அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை, கொள்கைரீதியான முடிவெடுக்க வேண்டுமென்றார்.
எனினும், கோட்டா அரசின் கூட்டணியிலுள்ள அங்கஜன் இராமநாதன், மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படும் தேசிய பாடசாலை நடைமுறையை நிறுத்த முடியாதென்றார்.
இது பெரிய வாதப்பிரதிவாதமாகியது.
எனினும், மத்திக்கு அதிகாரத்தை கொடுப்பதிலேயே அங்கஜன் குறியாக இருந்தார். மாணவர்கள் விரும்பமாட்டார்கள், அதிபர்கள் விரும்பமாட்டார்கள், பெற்றோர் விரும்பமாட்டார்கள், ஒதுக்கப்படும் வளங்கள் திரும்பிச் செல்லும் என காரணம் கூறிக் கொண்டிருந்தார்.
எனினும், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செ.கஜேந்திரன் ஆகியோர் தேசிய பாடசாலையாக்காமல் விடும் கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.எனினும், வடக்கு ஆளுனரும், அங்கஜனும் அதை மறுத்தனர்.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக 3 பாடசாலைகளை தரமுயர்த்தும் தேசிய கொள்கை உள்ளதாகவும், அது குறித்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
எனினும், அது தேசிய கொள்கையல்ல, அரசாங்கத்தின் உத்தரவு மட்டுமே, தேசிய கொள்கையென்பது 13வது திருத்தத்தில் உள்ள மாகாணத்திற்கு கல்வியும், சுகாதாரமும் பகிரும் அதிகார பரவலாக்கலே என்பதை தெளிவுபடுத்தினார்.
எனினும், தம்மால் இங்கு இது குறித்து முடிவெடுக்க முடியாது என்றும், இங்கு என்ன முடிவெடுக்கப்பட்டாலும், அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக, மாகாண பாடசாலைகளை தரமுயர்த்தும் என்றும் இருவரும் தெரிவித்தனர்.