யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இட...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கான தெரிவில் இடம்பெற்ற மாறுபட்ட அறிவிப்புகளால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து நிர்வாகம் எடுத்தத் தீர்மானத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீட மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் உள்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும்.
இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம், பல்கலைக்கழக மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய விருதுகளுக்காககிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின், மெய்யியல் துறை மாணவன் ஒருவரிடம் இருந்து துணைவேந்தருக்குக் கிடைத்த மேன்முறையீட்டின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் மூதவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு மெய்யியல் துறை மாணவன் விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டார்.
எனினும், மெய்யியல் துறை மாணவனுக்கு எதிராக மாணவர் தரப்பில் இருந்து மேன்முறையீடுகளும், ஆதாரங்களும், புதிய சாட்சியங்களும் கிடைத்த வண்ணம் இருப்பதனால், விருதுக்குரியவரைத் தெரிவு செய்வதற்குக் கால அவகாசம் போதாமையனால் விருது வழங்கல் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய விசாரணைகள் இடம்பெற்று பிறிதொரு விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.