வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து 8 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் ஈடுபட்டு வருகி...
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து 8 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ் பொலிஸார் மாற்று வீதியால் பயணத்தினை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அத்தோடு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.