தெற்கு அதிவேக வீதியின் கொட்டவை வெளியேறும் பகுதி இன்று (28) அதிகாலை 6 மணி முதல் மூடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதி...
தெற்கு அதிவேக வீதியின் கொட்டவை வெளியேறும் பகுதி இன்று (28) அதிகாலை 6 மணி முதல் மூடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிவேக வீதியின் கொட்டாவை பற்றுச்சீட்டு விநியோகிக்கும் இடத்தில் கடமையாற்றும் மூவர், கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கொட்டாவை ஊடாக அதிவேக வீதிக்கு பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கொட்டாவை ஊடாக பிரவேசிக்கும் வாகனங்களுக்கு பற்றுச்சீட்டு தற்காலிகமாக வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிவேக வீதியிலிருந்து கொட்டாவை வெளியேறும் பகுதி ஊடாக வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு மாத்திரம் அதிவேக வீதியிலிருந்து கொட்டாவை வெளியேறும் பகுதியூடாக வெளியேற அனுமதி வழங்கப்படுகின்றது என அமைச்சு தெரிவிக்கின்றது.
அத்துருகிரிய மற்றும் கஹத்துடுவ வெளியேறும் பகுதிகளின் ஊடாகவே வாகனங்களை வெளியேற இன்று காலை முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.
மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, கொட்டாவை வெளியேறும் பகுதி மூடப்படும் என பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.