தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில் ஒன்று கிடைக்காமையினால், மாவனெல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் சகோதரன் உயிரிழந்துள்ளதாக கேகாலை மாவ...
தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில் ஒன்று கிடைக்காமையினால், மாவனெல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் சகோதரன் உயிரிழந்துள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர்; இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”இலங்கையிலுள்ள அனைத்து இடங்களிலும் முயற்சித்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில் ஒன்றை தேடிக் கொள்ள முடியவில்லை” என டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் வாட்டுக்கு பொறுப்பாகவுள்ள வைத்தியர் ஒருவரின் சகோதரர், திடீர் சுகயீனம் காரணமாக மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை கடந்த 24ம் திகதி உறுதியாகியுள்ளது.
அதன்பின்னர், கடந்த 25ம் திகதி, குறித்த நபருக்கு சுவாச கோளாறு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில் ஒன்றை தேடியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடர்பில் மக்கள் இதைவிடவும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வைத்தியர் குமார விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.