யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்களாக ( பியோன்) கடமையாற்றும் 10பேரில் 5 பேர் 10 வருடங்களைத் தாண்டியும் ஒருவர் 32 வருடங்களை...
யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்களாக ( பியோன்) கடமையாற்றும் 10பேரில் 5 பேர் 10 வருடங்களைத் தாண்டியும் ஒருவர் 32 வருடங்களைத் தாண்டியும் சேவையில் ஈடுபடுவது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இடமாற்றுச் சுற்று நிருபத்தின் பிரகாரம் 6 வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் தமது இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்க முடியும் என அறியக் கிடைத்தது.
இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள கோப்பாய் பிரதேச செயலகம் ஒன்றுக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் அப் பிரதேச செயலகத்தில் இட மாற்றம் செய்யப்படாமல் 10 வருடங்களைத் தாண்டி பலர் இருப்பது அம்பலமாகியுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணியிட மாற்றத்துக்கு குறித்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்காமல் இருப்பினும் மாவட்ட செயலகத்தால் வழங்கப்படும் உள்ளக இடமாற்றம் ஏன்? இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
அரச சேவை பலர் தமது சொந்த மாவட்டங்களை விட்டு வெளியில் கடமையாற்றுகின்ற நிலையில் அதே மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அவர்களும் தாம் தமது சொந்த பிரதேசத்திற்கு திரும்ப வேண்டும் என்றால் அங்கு உள்ளவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான நிலையில் குறித்த உத்தியோகத்தர்கள் பல வருடகாலமாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருப்பது போன்று ஏனைய பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஆகவே பொறுப்புவாய்ந்த உயர் அதிகாரிகள் உரிய காலத்தில் அரச சேவையில் வழங்கப்படுகின்ற இட மாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது நிர்வாகம் ஒழுங்காக இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.