இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய ந...
இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நாட்டில், கடந்த மாதம் வரை, ஒரு நாளில் சுமார் 100 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 10,000 வரை எட்டியுள்ளது. நேபாள சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,127 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 139 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் சுமார் 4000 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் கொரோனா இரண்டாவது அலை இளைஞர்களையே குறிவைத்துள்ளது. நேபாளத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
நேபாளத்தின் மூத்த பத்திரிகையாளர் சுரேந்திர ஃபுயால், பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில், "நேபாளத்தின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையிலும் தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு வீட்டுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு சிகிச்சையளிக்கவும், சுவாசப் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கவும் மருத்துவமனைகள் போராடி வருகின்றன." என்று தெரிவித்தார்."சடலங்களை எரிக்கும் இடமான பசுபதிநாத் ஆரியகாட்டில் நீண்ட வரிசையில் சடலங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு ஹெலிகாப்டர் காத்மாண்டுக்கு வெளியில் இருந்து ஒரு கோவிட் நோயாளியை அழைத்து வருவதையோ அல்லது அழைத்துச் செல்வதையோ இப்போது பார்க்கிறேன். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்கிறார். கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் காத்மாண்டுவில் உள்ள பாகமதி ஆற்றின் கரையில் செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களில், இறப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில் வரத் தொடங்கியது. இப்போது இந்த எண்ணிக்கை நூறுகளை எட்டிவிட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலையில் மூழ்கியிருக்கும் நேபாளத்தை விட இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பட்டதாகவே கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நேபாளத்தின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து கவலைகள் எழத் தொடங்கியுள்ளன. கடந்த மே மாதம் வெளியான அரசின் அறிக்கையின் படி, மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், 1,595 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 480 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. மருத்துவர்களின் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், ஒரு லட்சம் பேருக்கு 0.7 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்று உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் 0.9-ஐ விட இது குறைவானது. மே 10 அன்று வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, நேபாளத்தில் 6,715 பேர் மருத்துவமனைகளிலும் மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 910 நோயாளிகள் ஐ.சி.யுவிலும், 295 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியிலும் உள்ளனர். காத்மாண்டு பள்ளத்தாக்கில் 1618 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், ஐ.சி.யுவில் 176 பேரும், 95 வென்டிலேட்டர் உதவியிலும் உள்ளனர்.ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், படுக்கையில்லாததாலோ சிகிச்சையில்லாததாலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாதவர்களும் இந்த ஆக்சிஜன் குறைபாட்டால் அல்லலுறுகின்றனர். மே 10 ஆம் தேதி தரவுகளின்படி, நாடு முழுவதும் 86,426 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.
நாட்டின் 77 மாவட்டங்களில் 22 இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாக நேபாளத்தின் சுகாதார அவசர சிகிச்சை மையம் மே 8 அன்று தெரிவித்தது.நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருவதாக நேபாள சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், "நோய்த்தொற்று மிகவும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை சுகாதார அமைப்பின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்குவது மிகவும் கடினமாகிவிட்டது." என்று தெரிவித்துள்ளது. மேலும், நேபாளத்தில் தடுப்பூசி வழங்கப்படும் விகிதமும் மிகக் குறைவு. கடந்த மாத இறுதி வரை, மக்கள்தொகையில் 7.2% பேருக்கு மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டோஸாவது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.