காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவ...
காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீன சுகாதார அமைச்சகம் குழந்தைகள் உள்பட 20 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காசாவில் இருந்து ஜெருசலேம் நகரை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்பு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்புகள் இடையே கடந்த சில நாட்களாகவே பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.
திங்கட்கிழமை ஜெருசலேம் நகரில் இஸ்ரேலிய காவல்துறையினர் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலத்தீன தரப்பினர் காயம் அடைந்தனர். இதன் பின்பு தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 'குறைந்தது மூன்று தீவிரவாதிகளை தாங்கள் கொன்றுள்ளதாக' இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
"நாங்கள் தொடங்கி விட்டோம்; நான் மீண்டும் சொல்கிறேன்; காசாவில் உள்ள ராணுவ நிலைகளை இலக்கு வைத்து நாங்கள் தாக்கத் தொடங்கி விட்டோம்," என்று இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டிணன்ட் கர்னல் ஜோனாத்தன் கான்ரிகஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது அப்துல்லா ஃபயாத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவிக்கின்றன.
ஹமாஸ் எல்லைமீறி விட்டதாகவும் அதற்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி தரும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ராக்கெட் தாக்குதல் நடத்துவதை ஹமாஸ் அமைப்பு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்டனி ப்ளின்கன், அனைத்து தரப்பினரும் பதற்ற நிலையைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.