இலங்கையின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை சீதுவ பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணி...
இலங்கையின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை சீதுவ பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளது.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை மையங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை போக்க, புதிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
2500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அடுத்த 3-4 நாட்களில் மேலும் 5000 படுக்கைகளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவசர மருத்துவ வசதி பல தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளை கொண்டு அமைக்கப்படும் இந்த சிகிச்சை மையத்தில், இந்த அலகுகளில் எந்த நேரத்திலும் 1,200 நோயாளிகளை சிகிச்சையளிக்க முடியும் என்றார்.
இதேவேளை, அவசரகால மருத்துவமனைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களை அமைப்பதில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவம், தேவையான உபகரணங்களை வழங்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளியான சமூக ஊடக செய்திகளை மறுத்தார்.
தொலைபேசி எண் குறிப்பிட்ட அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த தகவல் போலியானது என இராணுவத்தளபதி தெரிவித்தார்.
“ஆயினும்கூட, இந்த தீர்க்கமான தருணத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மெகா மனிதாபிமான திட்டங்களுக்கு தானாக முன்வந்து உதவி வழங்க விரும்புவோர், கோவிட் -19 பரவலை தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் அவ்வாறு செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது”என்று மேலும் தெரிவித்தார்.