செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய 1கோடி நிவாரணத்துக்கு என்ன நடந்தது?தம்மிடம் விபரம் இல்லை என்கிறது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு.. யாழ் மாவட்ட...
செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய 1கோடி நிவாரணத்துக்கு என்ன நடந்தது?தம்மிடம் விபரம் இல்லை என்கிறது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு..
யாழ் மாவட்டத்தில் நிவர்,புரவி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாண செஞ்சிலுவைச் சங்கத்தினரால் வழங்கப்பட்ட 1 கோடி 30 லட்சம் ரூபா நிவாரணத்திற்கு தம்மிடம் விவரம் இல்லை என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பதில் வழங்கியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிவர்,புரவி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் யாழ் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 1கோடிக்கு அதிகமான நிதி செலவழிக்கப் பட்டதாக யாழ் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார் .
இக் கருத்தினை அடிப்படையாக வைத்து யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு யாழ் செஞ்சிலுவைச் சங்கக் கிளையினால் செலவு செய்யப்பட்ட பாரிய நிதி தொகைக்காக வழங்கப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்களை தருமாறு தகவல் அறியும் சட்டம் மூலத்தால் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேற்படி கோரிக்கையாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிவாரணம் வழங்கியமை மற்றும் வழங்கிய தொகை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட பெயர் பட்டியல் விபரம் அடங்கிய தகவல்கள் தமது பிரிவில் இல்லையென எழுத்துமூலம் பதில் வழங்கியுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனமான குறித்த நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் வழங்கிய உதவிக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவே பயனாளிகள் பட்டியலை அனுப்பியதாக குறித்த நிறுவனம் தெரியப்படுத்தியது.
எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தம்மிடம் இல்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பதில் வழங்கியிருப்பது குறித்த அரச நிறுவனத்தில் ஊழல்கள் இடம்பெற்றதா? என்ற சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.
யாழ் மாவட்டத்தில் ஒரே மாதங்களில் வீசிய நிவர், புரவி சூறாவளி காரணமாக கரையோர பிரதேசங்கள் பல பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த அரசசர்பற்ற நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க சுமார் 1கோடியே 30 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியமை குறிப்பிடத்தக்கது.