யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நெல்லியடி பொலிஸ் ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவன் தலைமறைவாகி உள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவரும் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண் மீண்டும் பெற்றோரிடமே சென்று, அண்மைக் காலமாக அவர் பெற்றோருடனேயே வாழ்ந்து வருகிறார். விவாகரத்தும் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் புலோலியை சேர்ந்தவர் என்றும், கமநல சேவைகள் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார் என்றும், அவர் ஏற்கனவே சிலரை வாளால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நடு வீதியால் மனைவியை விரட்டிச் சென்று, சட்டையை எட்டிப்பிடிக்க, அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். வீதியில் விழுந்த பெண்ணை வாளால் வெட்டியுள்ளார். ஒரு வெட்டு மாத்திரமே அந்த பெண்ணில் விழுந்தது.
அதற்குள் அந்த பகுதியில் நின்றவர்கள் துரிதமாக செயற்பட்டு, வாள்வெட்டு நடத்தியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணிற்கு இடுப்பில் வாள் வெட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னரும் அந்த நபர், தாக்குதல் நடந்த இடத்திற்கு வாளுடன் இரண்டு முறை வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். நெல்லியடி பொலிசார் அவரது வீட்டிற்கு சென்ற போதும், அவர் வீட்டிலிருக்கவில்லை. அவரை கைது செய்ய பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.