நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஏதாவதொருவ வக...
நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக எரிபொருள் விலை அதிகரித்த சந்தர்ப்பங்களில் தான் அதுதொடர்பில் மக்களுக்கு நேரடியாக அறிவித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 நாட்களுக்கு தேவையான டீசல் மற்றும் எதிர்வரும் 17 நாட்களுக்கு தேவையான பெற்றோல் களஞ்சியத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, இந்த வாரத்தில் மற்றுமொரு எரிப்பொருள் கப்பலொன்று வருகைத்தரவுள்ளதாகவும், அந்த கப்பல் வருகைத் தந்ததன் பின்னர், களஞ்சியத்திலுள்ள எரிப்பொருளின் அளவு மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை போன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடு, இவ்வாறே எரிப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பெருமளவு களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்வதற்கான வசதிகள், ஏனைய நாடுகளை போன்று இலங்கை வசம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வசம் போதியளவு டொலர் கிடையாது எனவும், பெற்றோலிய கூட்டுதாபனம் நட்டத்தில் இயங்கி வருவதாகவும் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.