தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (Tamil National People's Front) அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வல...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (Tamil National People's Front) அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கைப்பற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக நடப்பதாக அறிய முடிகிறது.
இந்த கலந்துரையாடல் வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் (14) ஞாயிற்றுகிழமை காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர்களாக இருந்து, தற்போது அதிருப்தியுடன் ஒதுங்கியிருப்பவர்களே கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் கட்சியின் யாழ்.மாவட்ட தற்போதைய அமைப்பாளர், மன்னார் மாவட்ட அமைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டில் வடக்கு- கிழக்கு மாவட்டங்களில் அம்பாறை தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா 3 பேர் வீதம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரை உரிமை கோருவது, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மாகாணசபை தேர்தலில் களமிறங்குவது ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பிரமுகர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்திப்பு தொடர்பில் நாளை விரிவான பத்திரிகை அறிக்கை வெளியிடப்படும் என்றும், முன்னணியின் முதலாவது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்த 5 பேர் தற்போது தமது தரப்பில் இருப்பதாகவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருவர் மாத்திரமே உள்ளதாகவும், இனி வரும் நாட்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்படவுள்ளதாகவும் அந்த பிரமுகர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் யாழ்.மாநகர மேயர் மணிவண்ணனுடன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசல்யா, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் பி.யானுயன், இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.