கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தில் தற்காலிகமாக இணைப்பை ஏற்படுத்தி மக்கள...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தில் தற்காலிகமாக இணைப்பை ஏற்படுத்தி மக்களின் போக்குவரத்துக்கு வழிவகை செய்யுமாறு ஒப்பந்தக்காரர்களை அறிவுறுத்தியதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த பாலம் மழை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மக்களுக்கான போக்குவரத்துத் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்காலிகமாக போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட மண்பாதை நேற்றைய தினம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தினூடாக முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சென்று வரக்கூடிய வகையில் தற்காலிகமான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் .
ஆகவே குறித்த பகுதி மக்களின் நலன் கருதி போக்குவரத்தை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் அதன் வேலைகள் பூர்த்தி அடையும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.