வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும், இலங்கை பிரஜை ஒருவருக்கும் பதிவு திருமணம் செய்யும் போது, தேவையான ஆவணங்கள் குறித்த தெளிவூட்டலை பதிவாளர் நாயகம் ...
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும், இலங்கை பிரஜை ஒருவருக்கும் பதிவு திருமணம் செய்யும் போது, தேவையான ஆவணங்கள் குறித்த தெளிவூட்டலை பதிவாளர் நாயகம் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ், இலங்கையர் ஒருவருக்கும், வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும் பதிவு திருமணம் செய்யும் போது, வெளிநாட்டு பிரஜையினால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
01. செலுப்படியாகும் வெளிநாட்டு கடவூச்சீட்டு.
02.சிவில் நிலைமைகளை உறுதிப்படுத்தும் ஆவணம் (தேவைக்கு அமைய :− விவாகரத்து ஆவணம்/விதவை என உறுதிப்படுத்தும் ஆவணம்)
03.பிறப்பு சான்றிதழ் (பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றால் மாத்திரம்)
எனினும், வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும், இலங்கையர் ஒருவருக்கும் இடையில் பதிவு திருமணம் செய்வதானது, தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் ஏற்படக்கூடிய சமூக பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த கலந்துரையாடலில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, வெளிநாட்டு பிரஜை குறித்து பாதுகாப்பு உறுதிப்படுத்தும் ஆவணம் பெற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, மேலதிக மாவட்ட பதிவாளர் முன்னிலையில் மாத்திரம் பதிவு திருமணத்தை செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு பிரஜையின் சுய சுகாதார அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கின்றது.