நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ...
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.
டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்வதற்காக இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த நாடுகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்தியாவிற்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, வெளிநாடு சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்றைய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து, அமைச்சர்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டமையினால், அது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிய வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு முன்னர், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ நட்பு நாடுகளை நாடியுள்ளதாக அறிய முடிகின்றது.