யாழ் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட சந்தையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவர் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வது தொடர...
யாழ் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட சந்தையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவர் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வது தொடர்பாக மாநகர ஆணையாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆ.ஜோன்ஸ்ன் குற்றம்சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உடனடியாக சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்,தற்காலிக நியமன சுகாதார தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படவேண்டும். மாநகர சுகாதார தொழிலாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற இடமளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றார்.
குறிப்பாக குறித்த கோரிக்கைகள் தொடர்பில் யாழ் மாநகர சபை முன்பாக அண்மையில் போராட்டம் நடாத்தியதுடன் மாநகர ஆணையாளரிடம் இது தொடர்பாக பலதடவைகள் முறையிட்டும் பலன் இல்லை என்றார்.
மாநகர முதல்வர்,வடமாகாண ஆளுநர் ஆகியோரிடம் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அதேவேளை இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிடில் பாரிய ஆர்ப்பாட்டத்தை யாழில் மேற்கொள்வோம் என்றார்.