கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை ...
கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.
30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சம் தெரிவித்து வருகிறது. எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் உடன்படவில்லை.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரா்களை ரஷியா குவித்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், புதின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டு ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்-இல் தனது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷிய படையெடுப்பு என்ற வெளிநாட்டு பத்திரிகையாளரின் கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற தினசரி செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.