உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் வரும் ரஷ்யா, கடந்த கால அனுபவத்தின் மூலம் புதிய போர் யுக்திகளை கையாண்டு அதனை அந்நாட்டில் சோதித்து பார்ப்ப...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் வரும் ரஷ்யா, கடந்த கால அனுபவத்தின் மூலம் புதிய போர் யுக்திகளை கையாண்டு அதனை அந்நாட்டில் சோதித்து பார்ப்பதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய ரஷ்யா, முதற்கட்டமாக தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் கேலிபர் ரக ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் ராப் லி தெரிவித்துள்ளார். அவை குறைந்த வேகத்தில் சென்று உக்ரைனின் இவானோ பிரான்கிவ்ஸ்க் நகரை முதலில் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, தொலை தூர இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக வுகணைகளையும் ரஷ்யா அதிகளவில் பயன்படுத்தியதாக ராப் லி கூறியுள்ளார்.
காலிபர் ரக ஏவுகணைகள் போர் கப்பலில் இருந்து ஏவப்படும் நிலையில், தரையில் இருந்து ஏவும் புதிய இஸ்காண்டர் ரக ஏவுகணை, பிஎம்-30 ஸ்மெர்ச் ராக்கெட்டுகள், டாங்கிகளில் இருந்து ஏவப்படும் TOS-1 ரக ஏவுகணை என பல வகையான ஆயுதங்களை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதனை புதிய வகையான போர் முறையாக குறிப்பிடும் அவர்கள், சோவியத் யூனியன் காலத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிநவீன ராணுவ தளவாட அமைப்புகளை பயன்படுத்தி உக்ரைனை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த வழிமுறை உக்ரைன் மீது வான் தாக்குதலை தவிர்க்கவே பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவ வீரர்கள் மூலம் தரை வழி படையெடுப்பை நடத்தும் முன் உக்ரைனின் வான் தாக்குதல் தடுப்பு அமைப்புகளையும், விமான தளங்களையும் அழித்து செயலிழக்கச் செய்ய ரஷ்யா திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1991 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் ஈராக் மீது நடத்தப்பட்ட போரில் அமெரிக்க ராணுவம் இதே யுக்தியை பயன்படுத்தியுள்ளது.
முன்னதாக, செர்பியர்கள் இன படுகொலையில் ஈடுபடுவதாக கூறி அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான யூகஸ்லாவியா மீது 1999ஆம் ஆண்டில் போர் தொடுத்தனர். 1991ஆம் ஆண்டில் சதாம் உசேனுக்கு எதிராக குவைத் மீது அமெரிக்கா பயன்படுத்திய போர்முறையே யூகஸ்லாவியாவில் பயன்படுத்தியதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
3 வாரங்கள் நீடித்த இந்த தாக்குதலில் நேட்டோ படைகள் சில பின்னடைவுகளை சந்தித்தபோதும், யூகோஸ்லாவியா படைகளின் தகவல் தொடர்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் அமைப்புகளை சேதப்படுத்தி அவர்கள் பலவீனப்படுத்தப்பட்டதாக அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலின்போது நேட்டோ படைகள் எதிர்கொண்ட நெருக்கடிகளையும், அவர்களுக்கு சாதகமாக நிகழ்ந்தவற்றையும் கவனித்த ரஷ்யா, உக்ரைனுடனான போரில் இதனை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் , ஆர்மீனிய படைகளை டிரோன் மற்றும் வான் வழி தாக்குதல் மூலம் அஜர்பைஜான் படைகள் வீழ்த்தியதையும், செச்சன்யா, ஜார்ஜியா, சிரியா உள்ளிட்ட போர்களில் ரஷ்யாவுக்கு இருந்த அனுபவத்தையும் வைத்து தற்போது புதின் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
பல நாடுகளில் நிகழ்த்தப்பட்ட போர்களின் மூலம் தாங்கள் கற்றதையும் கடந்த கால அனுபவத்தின் மூலம் ரஷ்யா உக்ரைனை வீழ்த்துமா அல்லது ரஷ்யாவிற்கு ஏதேனும் பின்னடைவுகள் ஏற்படுமா என்பதை உலகம் உற்றுநோக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.