அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள...
அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் “தமிழன்” செய்திகளிடம் நேற்று தெரிவித்தாா்.
அத்தோடு, கொரோனாவால் இரு வருடங்கள் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அதன் காரணமாக அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாதுபோன செயற்பாடுகள் குறித்தும் மக்களிடம் சென்று விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடமும் வலியுறுத்தி யுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (07) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதில் அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், கடந்த 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒரு இலட்ச வேலைத்திட்டங்கள் குறித்தும் தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதன்படி, நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட் டுள்ள ஒரு இலட்ச வேலைத்திட்டங்களை நான்கு கட்டங்களாக பிரித்து இவ்வருடத்திற்குள் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கால தாமதமின்றி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந் துள்ளதாகவும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாதுள்ளதாக, எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டிய போதிலும், அரசாங்கத்தின் ஒரு இலட்ச வேலைத்திட்டத் துக்கு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் ஆரம்ப நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதாகவும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் கொரோனா தொற்றின் பாதிப்புக்கு முகம் கொடுத்தமையினால், இரு வருடங்களில் எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது போனது. இதனால், மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளதாக பலதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பொது மக்களின் பாதுகாப்புக்காகவே கடந்த இரு வருடங்களில் பலமுறை பொது முடக்கத்திற்குச் சென்றதையும் மக்களுக்கு விளக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வருடங்களில் அரசாங்கத்தினால் எவ்வித அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்க ளையும் முன்னெடுக்க முடியாதமைக்கான காரணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சென்று விளக்கப்படுத்துங்கள் என்றும் ஜனாதிபதி அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு முதல் இந்திய ஒயில் நிறுவனமான ஐ.ஓ.சி நிறுவனம், ஒக்டென் 92 பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளதால், அரசாங்கமும் எரிபொருட்களின் விலையை அதிகரிக்குமா, என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு இங்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில, தற்போது அவ்வாறு அதிகரிப்பதற்கான எண்ணப்பாடில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்திலிருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சிலர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றுள்ளதுடன், இனி யாரேனும் அரசை விமர்சித்தால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் அறிக்கை
நேற்றைய நாடாளுமன்ற குழுக்கூட்டம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக் கையொன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட் டுள்ளதாவது,
மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டன.
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டு மென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப் பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ விசேட விளக்கமளித்தார்.
குறித்த கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Thanks -
https://www.thamilan.lk/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af/