இரண்டாம் இணைப்பு ரஷ்யா – யுக்ரேன் இடையிலான சந்திப்பு பெலாரூஸில் நிறைவடைந்தது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்ப...
இரண்டாம் இணைப்பு
ரஷ்யா – யுக்ரேன் இடையிலான சந்திப்பு பெலாரூஸில் நிறைவடைந்தது.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை தொடரும் முன்பாக, இரு தரப்பினரும் தத்தமது தாயகத்துக்குச் சென்று மீண்டும் கூட முடிவு செய்துள்ளதாக பெலாரூஸ் செய்தி நிறுவனமான பெல்டாவின் தகவலை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையின் விரிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் வெளிவரும் தகவல்களின்படி யுக்ரேன் தரப்பில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, யுக்ரேன் முழுவதும் உள்ள ரஷ்ய படைகள் யுக்ரேனிய தரப்பின் கடுமையான எதிர்வினையை சந்தித்து வருகின்றன.
இதேவேளை, ரஷ்யா உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார தடைகளுக்கு ஆளாகி பெரிய அளவில் அந்த நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெலாரூஸின் கோமெல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை தயார்ப்படுத்தியதாக பெலாரூஸ் தெரிவித்திருந்தது.
இதன்படி, அனைத்து பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு வருகைத் தந்த நிலையில், பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலாரூஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எனடொலி க்லாஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஆரம்பமாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலங்கள் யுக்ரேனுக்கு தீர்மானமிக்கது என அந்த நாட்டு ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியிலேயே, தற்போது பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.