நாடளாவிய ரீதியில் நாளைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் அனைத...
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், நாட்டின் அனைத்து வர்த்தக வலயங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையத்தின் ஏற்பாட்டாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கையின் போதும் குறித்த தொழிலாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாளை நடைபெறுகின்ற போராட்டத்தில் மலையக கட்சிகளும் இணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கங்கள் குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அனைத்து துறைகளும் இணைந்து அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரி நாளை பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
கெப்பிட்டல் செய்திப்பிரிவிற்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்டோர் பதவியை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார்.