நாட்டின் நிலவும் நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு வேண்டும் என கோரி காலிமுகத்திடல் - ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெறும் போராட்டம் 26 ஆவ...
நாட்டின் நிலவும் நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு வேண்டும் என கோரி காலிமுகத்திடல் - ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெறும் போராட்டம் 26 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
போராட்டம் நடைபெறும் நாள் தொடர்பாக அறிவிப்பதற்கு பலகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இன்று முற்பகல் போராட்ட இடத்தை சுத்தம் செய்ததுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேடையொன்றை அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கும் முகமாக நாட்டில் பல இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சிலர் தனது சொந்த இடங்களிலிருந்து கொழும்பிற்கு நடந்து வந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் இதனை தெரிவித்தார்.
தமது அமைப்பானது வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசானது திட்டமிட்ட வகையில் காணி சுவிகரிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவர்கள் தற்போது கடும் பிரச்சினைளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
எனவே அரசாங்கம் அதற்குத் தகுந்த தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.