நாடாளுமன்றில் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதில் கடந்...
நாடாளுமன்றில் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதில் கடந்த சில நாட்களாக சிக்கல் ஏற்பட்டிருந்தது. முன்னதாக பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தமது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார்.
அதற்கு ஜனாதிபதியினால் பதிலளிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பதில் தற்போது சிக்கல் இல்லை எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகர் நியமனம் இடம்பெறவுள்ளது. புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் விசேட உரையினை ஆற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.