கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தை அடக்கிய முறை தவறு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ...
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தை அடக்கிய முறை தவறு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன மத பேதமின்றி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் காலிமுகத்திடலில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்தது.
கடந்த திங்கட்கிழமை குறித்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது விரோத சக்திகளின் செயற்பாட்டின் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை யாவரும் அறிந்ததே.
எனது 70 வருட அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை பார்த்துள்ளேன் பல போராட்டங்களில் பங்குபற்றியுள்ளேன்.
ஆனால் இலங்கையில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் தற்போதைய காலிமுகத்திடலில் போராட்டமாக பார்க்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க என்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் தற்போது பிரதமராக பதவியேற்றுக் கொண்டமை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியபோது ஆட்சியை அப்போதைய சந்திரிகா அம்மையார் கலைத்தார்.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்ற போது என்னை திட்டமிட்டு தோற்கடித்தார்கள் இவை இரண்டைப் பற்றியும் நான் இப்போது கதைக்க விரும்பவில்லை
இளைஞர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதியை வெளியேறுமாறும் பாராளுமன்றத்தை கலைத்துப் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தும் நிலையில் மக்களால் தெரிவு செய்யப்படாத ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.