பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், நாடாளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடு...
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், நாடாளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்களை, காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் மஹரகம காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் கட்டணம் அறவிடாமல் பெருமளவிலான சட்டத்தரணிகள் கடுவலை நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தமை அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.