நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்...
நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பஸ்கள் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில், இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.
அத்துடன், நாட்டில் டீசலுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், நாளைய தினம் முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலும், இலங்கையிலுள்ள வங்கி சேவைகள் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை இயங்காது என தனியார் வங்கிகள் தமது பேஸ்புக் கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடையும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.