அம்பலாங்கொட - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய...
அம்பலாங்கொட - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேகநபர் ஒருவர், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று (23) பிற்பகல் குறித்த கான்ஸ்டபிள் முறைப்பாட்டை விசாரிக்க அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அதன்போது, சந்தேகநபரினால் அவர் தாக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தரை அங்கிருந்து அப்புறப்படுத்த அயலவர்கள் நடவடிக்கை எடுத்ததுடன் சம்பவம் தொடர்பில் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அதனையடுத்து, பிட்டிகல காவல் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதன்போது, குறித்த சந்தேகநபர் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபரை தடுக்க முயன்ற போது, தன்னிடமிருந்த கைக்குண்டுகள் மூலம் காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்
இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேகநபர் காயமடைந்தார்.
அதன்பின்னர் காயமடைந்த சந்தேகநபர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபர் இன்று(24) காலை உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.