யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்தைச் சேர்ந்த தவில் - நாதஸ்வர கலைஞர்களுக்கும் நுணாவில் ஜஓசி ...
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்தைச் சேர்ந்த தவில் - நாதஸ்வர கலைஞர்களுக்கும் நுணாவில் ஜஓசி இல் க்யூ.ஆர்.கோட் அடிப்படையில் இன்று பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்ப நிலையத்தில், ஜே/288 முதல் ஜே/320 வரை நேற்றைய தினம் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட நிலையில், இன்று ஏனைய பிரிவுகளுக்கு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைவாக இன்று 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 321 தொடக்கம் ஜே/ 347 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்திலுள்ள தவில்- நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த விநியோகமானது இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஓர் ஆவணத்தையும், தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவிடயந் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா, க்யூ ஆர் கோட் அடிப்படையில் அனைத்து பொதுமக்களுக்கும் தொடர்ச்சியாக எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்படும். தென்மராட்சி பிரதேச ஆசிரியர்களுக்கும், தவில்- நாதஸ்வர கலைஞர்களுக்கும் இன்று ஒதுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறாது. ஆகவே பொதுமக்கள் வருகை தந்து ஏமாற்றம் அடைவதை தவிர்த்துக் கொள்ளவும். அவர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமன்றி தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்காக அவர்களுக்கு இரு தினங்கள் ஒதுக்கப்படும்- என்றார்.