பாடசாலை மாணவர்களிடையே ஜஸ் போதைப்பொருள் வேகமாக பரவுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இது மாணவரிடம் மனநோய்க்கான வா...
பாடசாலை மாணவர்களிடையே ஜஸ் போதைப்பொருள் வேகமாக பரவுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இது மாணவரிடம் மனநோய்க்கான வாய்ப்புக்களை அதிகம் ஏற்படுத்துமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,பாடசாலை மாணவர்களிடையே ஜஸ், ஹெரோயின்,புகையிலை போதைப்பொருள் வேகமாக பரவுகிறது என்றும் பெற்றோர் குறித்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும் என்றார்.
ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டால் மனநல பாதிப்பு அதிகரிக்கும் என்று கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
சிலர் குறித்த ஐஸ் போதைப்பொருளை, மாணவர்களிடத்தில் கொண்டு செல்வதற்குத் திட்டமிட்ட வகையில் முயற்சித்து வருகின்றனர் என்றும் இதனால், இளைஞர்களின் எதிர்காலம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐஸ் உள்ளிட்ட நச்சுப் போதைப்பொருள்களுக்கு, மாணவர்கள் அடிமையாகுவதைத் தடுப்பதற்குக் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடி வேலைத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023 ஜனவரி மாதம் 2ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் ‘ஐஸ்’ எனப்படும் ‘மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் நவம்பர் 24ஆம் திகதி தொடக்கம் அமலுக்கு வந்துள்ளது.