ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எட்டு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எட்டு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் செவ்வாய்க்கிழமை (06) சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
பலத்த விவாதத்திற்கு பின்னர் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தியால்
வாக்கெடுப்புக்கு கோரப்பட்டபோது இலங்கை தமிழரசுக்கட்சியின் எட்டு உறுப்பினர்களும் வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 உறுப்பினர்களும், எதிராக ஒரு உறுப்பினரும் ஒரு உறுப்பினர் நடுநிலமையையும் வகித்திருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்ததுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் இன்றைய கூட்டத்திற்கு வருகைதரவில்லை.
இருபது உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 2 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் சார்பாக தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.