இன அழிப்பிற்கு பின்னர் கலையை வளர்ப்பதில் எமது சமூகம் பின்னடிக்கிறது – வலி. மேற்கு தவிசாளர் கவலை இரண்டாம் உலக மஹா யுத்தத்திற்கு பின்னர் ஜேர்ம...
இன அழிப்பிற்கு பின்னர் கலையை வளர்ப்பதில் எமது சமூகம் பின்னடிக்கிறது – வலி. மேற்கு தவிசாளர் கவலை
இரண்டாம் உலக மஹா யுத்தத்திற்கு பின்னர் ஜேர்மன் பல கலாச்சார மண்டபங்களை அமைத்தது. கலைதான் எங்களை மீண்டெழச் செய்யும் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் எங்களது அழிவிற்கு பின்னர் நாங்கள் எங்களது கலைகளை வளர்ப்பதற்கு பின்னடிக்கின்றோம் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தினர் ஏற்பாடு செய்ய மாபெரும் கலை விழாவில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்திலே கலை கலாச்சார நிகழ்வுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த விடயத்தினை எடுத்து நோக்குவோமேயானால் நிதி ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. யாழ்ப்பாணத்திலும் கலை கலாச்சாரங்களை வளர்ப்பதற்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டினுடைய பிரச்சினை, இந்த நாட்டு மக்களுடைய தேவை, எங்களுடைய சமயத்திற்கு இருக்கின்ற பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளோடு இருக்கின்ற எங்களுக்கு நின்மதியை கொடுத்து, ஆயுளை கூட்டுகின்ற ஒரே விடயம் இந்த கலை. யார் தடுத்தாலும், எங்களது கலை கலாச்சார விழுமியங்களை நாங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுக்கு பின்னர் இப்போது இருக்கின்ற நிலையிலே எமது இருப்புக்களை எல்லாம் அழிக்கின்ற ஒரு நிகழ்வு கச்சிதமாக நடைபெறுகிறது. எமது கலை கலாச்சாரங்கள் அனைத்தையும் அழிக்கின்ற ஒரு மென்போக்கு நிகழ்வு இங்கு நடக்கின்றது.
நாங்கள் எங்களது கலை கலாச்சார விழுமியங்களை தொலைத்தோம் என்றால் நாங்கள் ஒரு அடையாளம் இல்லாத இனமாக, இப்போது கையேந்துவது போது மேலும் பாரிய மோசமான நிலமைக்குள் தள்ளப்படுவோம் – என்றார்.