ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்ப...
ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மாணவர்களுக்கு பாடசாலை மிகவும் விருப்பமான இடமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும், சகல பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்தி, கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேபோன்று, பாடசாலைகளிலிருந்து வெளியேறும் மாணவர்களின் திறமைகளுக்கு அமைய, அவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசத்தையோ அல்லது தொழில் பயிற்சி துறை சார்ந்த விடயங்களுக்குள் உள்வாங்குவதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.