வலி. வடக்கில் 110 ஏக்கர், நிலங்களும், வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கர் நிலத்தையும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரையும் உடன் விடுவிக்குமாறு ஜ...
வலி. வடக்கில் 110 ஏக்கர், நிலங்களும், வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கர் நிலத்தையும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரையும் உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சணைகள் தொடர்பான கலந்துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும் வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானது என இணங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியபோது 5 இடங்களில் 110 ஏக்கர் இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பதாக படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர். அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டு வடக்கு 18 ஏக்கர், கே.கே.எஸ். பிரிவில் 28 ஏக்கரும், கீரிமலையில் 30 ஏக்கரும், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடத்திலுமாக 110 ஏக்கரும் இம்மாத இறுதியில் விடவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டிடங்கள் எழுந்தால் விமானங்கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள் மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையினை மேற்கொள்வர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாக பதிலளித்தனர்.
இதேநேரம் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து அரச இதழ் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில் 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிட்ட அரச இதழை மீளப்பெற நாடவடிக்கை வேண்டும் அது மக்களின் உறுதிக்காணிகள் யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம்பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர அதனை காடு என வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என (வர்த்தமானி) அரச இதழ் பிரசுரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனை பரிசீலிப்பதாக கூறியபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலையிட்டு அந்த இடம் எனக்கு தெரியும் அப் பகுதியில் எந்த காடும் இருக்கவில்லை அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனையவற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவியுங்கள் தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சனை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்கு பதிலளியுங்கள் என ஜனாதிபதி பதிலளித்தார்.