15 வர்த்தகர்களிற்கு இலட்சம் தண்டம். உணவகம், வெதுப்பகம் சீல் வைப்பு, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி… சுகாதார அமைச்சின் சுற்றுநிர...
15 வர்த்தகர்களிற்கு இலட்சம் தண்டம். உணவகம், வெதுப்பகம் சீல் வைப்பு, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி…
சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்நகர், வண்ணார்பண்ணை, கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் உணவகங்கள், பேக்கரிகள், பலசரக்கு கடைகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டி வைத்திருந்த 11 பலசரக்கு கடை வர்த்தகர்கள் யாழ்நகர் மற்றும் வண்ணார்பண்ணை பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கினர். அத்துடன் கொழும்புத்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் மற்றும் 03 உணவகங்களும் பரிசோதனையில் சிக்கின.
இதனையடுத்து 15 வர்த்தக உரிமையாளர்களிற்கும் எதிராக யாழ் மாநகரசபை பொதுசுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் 29.03.2023 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளை விசாரித்த மேலதிக நீதவான் 400,000/= தண்டம் அறவிட்டதுடன், ஓர் வெதுப்பகம் மற்றும் ஓர் உணவகம் என்பவற்றினை சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை சீல் வைத்து மூடுமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை இட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பன சீல் வைத்து மூடப்பட்டன…