கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடு...
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதிபர், ஆசிரியர் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் இன்றைய தினம், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் இன்றைய தினம் பணி புறக்கணிப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெறுகின்ற பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளித்து துறைமுகங்கள் மற்றும் நீர் வழங்கல் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.
அதேநேரம் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கமும், இன்று சுகையீன விடுமுறை அறிக்கையிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றது.
இதேவேளை, அஞ்சல் சேவை ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், திட்டமிட்டவாறு நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய பணிபுறக்கணிப்பிற்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என சமுர்த்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்