மும்பையின் புறநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று, குறைந்தது 11 பேர் கடும் வெயில் காரணமாக உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தெரிவ...
மும்பையின் புறநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று, குறைந்தது 11 பேர் கடும் வெயில் காரணமாக உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்வில் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு, நாட்டின் நிதித் தலைநகரான மும்பையின் புறநகரில், நன்கு அறியப்பட்ட சமூக ஆர்வலருக்கு விருதுகளை வழங்கினார்.
இந்தநிலையில், நிகழ்வு இடம்பெற்ற கர்கர் பிரதேசத்தில் பிற்பகலில் அதிகபட்ச வெப்பநிலை 38 பாகை செல்சியஸாக பதிவானது.
இந்த நிகழ்விற்குப் பிறகு, கடுமையாக வெப்பப் பாதிப்புகளால் சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தியாவில் மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த ஆண்டு பெப்ரவரியில் வானிலை மையம் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.