யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இந்த நிகழ்வு இன்று காலை யா...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையிலேயே இன்று கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில்,யாழில் நாவற்குழிப் பகுதியில் அண்மையில் ஒரு புத்தர் கோயில் அமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை கச்சதீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை குறித்த இடத்திலிருந்து அகற்றி விட்டதாக சிறிலங்கா கடற்படை நேற்றைய தினம் யாழ். ஆயர் இல்லத்திற்கு அறிவித்திருந்தது.
தமிழ் மக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், சிறிலங்கா படையினரால் கையகப்பபடுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி பிரதிஷ்டை செய்யும் செய்பாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இடம் பெறுகின்றன.
அதேபோன்றே தையிட்டிப் பகுதியிலும் நரசிம்ம வைரவர் கோயிலைப் பௌத்த கோயிலாக மாற்றி, பாரியளவிலான கட்டடம் அமைத்து அதற்கு இன்று கலசம் வைக்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.