குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக தேரர்களால் தொடரப்பட்ட வழக்கு எதிா்வரும் செப்டெம்பா் மாதம் 14ம் திகதி வரை ஒத்திவை...
குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக தேரர்களால் தொடரப்பட்ட வழக்கு எதிா்வரும் செப்டெம்பா் மாதம் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்று (8) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருத்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பிக்குகள் உள்ளிட்ட தரப்பினா் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட்நிக்சன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல் தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்திரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேரர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸாா் அழைப்பாணை விடுத்திருந்தனர்.
இவ்வாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 2022ம் ஆண்டு செப்டெம்பா் மாதம் 2ம் திகதி முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்ளான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து பொலிஸாரால் 2022ம் ஆண்டு செப்டெம்பா் மாதம் 20ம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது நேற்று (08) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கினை ஆராய்ந்த நீதவான், குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அத்தோடு இந்த வழக்குடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் அடுத்த தவணையின்போது மன்றில் முன்னிலையாகவேண்டும் எனவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.