கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்புக்கு தாக்கம் ஏற்படாது என்று அரசாங்கம் கூறினாலும், இந்தக் கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு...
கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்புக்கு தாக்கம் ஏற்படாது என்று அரசாங்கம் கூறினாலும், இந்தக் கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு 87 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்படுமென்று பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அந்தக் கட்சியின் தலைமை அலுவல கத்தில் நேற்று (04) இடம்பெற்ற செய்தி யாளர் சந்திப்பின்போதே அவர் இவ் வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு பாதிப்பு இல்லை என்று அரசாங்கம் கூறினாலும் அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரம் மற்றும் கருத்து நோக்கத்தை ஆழ்ந்து அவதானிக்கும்போது அது பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜூன் மாதம் 28 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் நிதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் மூன்றாவது பக்கம் வரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய நிரப்பப்படவேண்டியுள்ள இலங்கை அபிவிருத்தி பிணையங்களின் பெறுமதி 886 டொலர் மில்லியன் அல்லது 272 பில்லியன் ரூபாவாகும்.
மத்திய வங்கியினால் அமைச்ரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசைனயின் 29 ஆவது பக்கத்துக்கமைய பிணைமுறிகளின் பெறுமதியில் 30 சதவீதம் குறைக்கப்படும். அதாவது, 81.1 பில்லியன் ரூபா மூலதன குறைப்பு இடம்பெறும்.
அபிவிருத்தி பிணைமுறிகளில் 85 சதவீதமானவை வங்கிகளுக்கு உரித்தானவை. அதற்கமைய, மூலதன குறைப்பால் மாத்திரம் வங்கிகளுக்கு 69 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும்.
இதற்கு மேலதிகமாக, வங்கிகளினால் அரச நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள டொலர் கடன் தொகை 323 மில்லியன் டொலர் அல்லது 92 பில்லியன் ரூபாவாகும். அந்த தொகையிலும் 30 சதவீதம் குறைக்கப்படும். அதாவது 28 பில்லியன் ரூபா குறைக்கப்படும்.
பிணைமுறி மற்றும் டொலர் கடன் ஆகிய இரண்டில் இடம்பெறும் மூலதன குறைப்பினால் மாத்திரம் வங்கியொன்றுக்கு 97 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக வட்டியில் 35 சதவீதம் வரையில் குறைக்கப்படும். அதனூடாக வங்கியொன்றுக்கு ஏற்படும் நட்டத்தை எம்மால் கணக்கிடமுடியவில்லை.
அதாவது, தேசிய கடன் மறுசீரமைப்பினூடாக வங்கிகளுக்கு ஏற்படும் நட்டம் 97 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
நாட்டிலுள்ள 190 இலட்சம் ஊழியர் சேமலாப நிதிய கணக்குகளையும் மத்திய வங்கியே முகாமைத்துவம் செய்கிறது.
அதிக இலாபத்தை ஈட்டும் பாதுகாப்பான முதலீட்டாளர்களின் முதலீடுகளில் முதலீடு செய்து ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு உயர் வட்டி வீதத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது மத்திய வங்கியின் பொறுப்பாகும்.
எமது சேமலாப நிதிய கணக்குகளை மத்திய வங்கி முகாமைத்துவம் செய்யும் அதேவேளை, மத்திய வங்கி அதிகாரிகளுக்கென தனியான சேமலாப நிதியமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2022ஆம் ஆண்டே நாட்டின் வரலாற்றில் அதிகளவு வட்டி வீதம் பதிவிடப்பட்ட வருடமாகும். பிணைமுறி மற்றும் திறைசேரி முறிகளின் வட்டி வீதம் 32 சதவீதம் வரையில் அதிகரித்திருந்தது.
2022ஆம் ஆண்டு மத்திய வங்கி சேமலாப நிதியத்தில் முதலீடு செய்து பெற்றுக்கொண்ட இலாபம் சகல உறுப்பினர்களினதும் கணக்குகளுக்கும் 29 சதவீத வட்டி வருமானம் 29 சதவீதத்தால் வரவு வைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் அந்த மத்திய வங்கியே முகாமைத்துவம் செய்யும் மக்களின் சேமலாப நிதி வருமானத்தில் உறுப்பினர்களுக்கு 9 சதவீத வட்டி வருமானம் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதியங்களில் அதிக இலாபமீட்டும் இடங்களில் முதலீடு செய்து மக்களின் நிதியங்களில் குறைந்த இலாபம் பெறும் இடங்களிலும் முதலீடு செய்வது அநீதியான செயற்பாடாகும். சிறைத்தண்டைனை வழங்கக்கூடிய நம்பிக்கை மீறல் குற்றத்தையே மத்திய வங்கி அதிகாரிகள் செய்துள்ளனர்.
இந்த அநீதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் நாட்டுக்கு தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும். அதுபோன்று இந்த குற்றம் மீண்டும் இடம்பெறாமலிருக்க வேண்டுமெனில் மத்திய வங்கி அதிகாரிகளின் சேமலாப நிதியத்தை பொது மக்களின் சேமலாப நிதியத்துடன் இணைத்து ஒரே நிதியமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் யோசனையாகும்.
2022ஆம் ஆண்டிலேயே ஊழியர் சேமலாப நிதியம் வரலாற்றில் அதிக இலாபத்தை அடைந்துள்ளது. 357 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இருந்தபோதும் இந்த வருமானத்தை வருமான வட்டியாக உறுப்பினர்களின் கணக்குளில் வரவு வைக்காமைக்கு காரணம், கடன் மறுசீரமைப்பின்போதே சேமலாப நிதியத்தை பலிகொடுப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டிருந்ததா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது என்றார்.