13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டுமென சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கனேடிய வெள...
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டுமென சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் Marie-Louise Hannan-இடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் Marie-Louise Hannan-ஐ நேற்று முன்தினம் (06) சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் Eric Walsh-உம் கலந்து கொண்டிருந்தார்.
13 ஆவது திருத்தத்தையும் 16 ஆவது திருத்தத்தையும் அமுல்படுத்தி, ஜனாதிபதி முதலில் நேர்மையை பறைசாற்றிக் காட்ட வேண்டும் என இதன்போது குறித்த கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு அல்ல என்பதை அறிந்துள்ளபோதிலும், அரசியலமைப்பில் உள்ளதை நடைமுறைப்படுத்துவதற்கு கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஒரே குரலில் இலங்கையை வலியுறுத்த வேண்டுமென இந்த சந்திப்பின்போது கோரப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.