போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை இணையத்தில் நடத்திய பிரசங்கத்தின் மூலம் மாத்திரம் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை இணையத்தில் நடத்திய பிரசங்கத்தின் மூலம் மாத்திரம் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதகர் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவரவில்லை என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்னும் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
போதகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் நாட்டிற்கு வந்திருந்தாலும், அவர் இன்னும் வெளிநாட்டில் இருந்து இணையத்தில் பிரசங்கம் செய்கிறார்.
இந்நிலையில் அவர் இலங்கை வந்தவுடன் கைது செய்யத் தயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் ஜெரம் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமைகளில் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட பிரசங்கத்தில் 300 பேரை பதிவு செய்துள்ளார்.
இவர்களில் ஒருவரிடமிருந்து 139 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் அவர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்த பிரசங்கங்களால் போதகர் சம்பாதிக்கும் பணம் குறித்து எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பிரசங்கம் செய்யும் கட்டுநாயக்க, மிரக்கிள் டோம் மண்டபம் அமைந்துள்ள, காணி நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவரால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.
போதகரின் சுமார் 13,000 சீடர்கள் அந்தந்த மண்டபத்தின் அபிவிருத்திக்காக பணம் வழங்கியதாகவும், அதற்கான பற்றுச்சீட்டை அனைவருக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மிராக்கிள் டோம் மண்டபம் கட்ட மொத்தம் ரூபாய் 253 கோடி செலவாகியுள்ளதாகவும்.சட்ட விரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் போதகரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் எவரும் இதற்கு முன்னர் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அதேநேரம் நாட்டிலுள்ள முன்னணி தணிக்கை நிறுவனமொன்றை தனது சொத்துக்களில் தணிக்கை மேற்கொள்ள போதகர் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போதகர் வருமான வரியை முறையாக செலுத்துகிறாரா என்பது குறித்தும், அவரது நெருங்கிய உறவினர்கள் நடத்தும் 6 நிறுவனங்கள் குறித்தும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ஜெரோம் பெர்னாண்டோ சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்