இரண்டாம் இணைப்பு நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது...
இரண்டாம் இணைப்பு
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.