செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளத...
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மனிதப் புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.
தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலையே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு சர்வதேச விசாரணை கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என தெரிவித்தனர்.