வடமாகாணத்திற்கான புதிய ஆளுநராக தமிழரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் ...
வடமாகாணத்திற்கான புதிய ஆளுநராக தமிழரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே இன்று அவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அவருடன் மேலும் இரண்டு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
ஊவா மாகாண புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக தம்ம திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , கடந்த வௌ்ளிக்கிழமையன்று மேல் , மத்திய , வடமத்திய , வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான 5 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
அதன்படி , 8 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ,இன்னும் தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மாத்திரம் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுரேன் இராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றவர். 2005ம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் ஆயுட் பட்டம் பெற்றார்.
தற்போது வரையில் ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார். மிக முக்கியமாக அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதி.பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.