வாழ்வோடும் வறுமையோடும் கடல் அலையோடும் போராடியோர் மீது நடந்த தாக்குதல்.தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த அப்பாவி ஜீவன்கள் மிருகத்தனமாக வெறியோ...
வாழ்வோடும் வறுமையோடும் கடல் அலையோடும் போராடியோர் மீது நடந்த தாக்குதல்.தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த அப்பாவி ஜீவன்கள் மிருகத்தனமாக வெறியோடு கொல்லப்பட்டனர். ஏன் நடந்தது இந்தக் கொடுமை? அப்பாவி தமிழர்களின் செங்குருதியால் குமுதினி உறைந்து போனாள்.
குமுதினி 1960களில் ஸ்ரீலங்கா அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும்.
மாவலிதுறை நெடுந்தீவு கிழக்கில் இருந்தது. அங்கிருந்து நயினாதீவின் கிழக்கு கரை நோக்கி பயணித்து புங்குடுதீவின் கரையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் பயணிகளையும் பண்டங்களையும் கரை சேர்ப்பதும் அதேபோல் மீண்டும் மக்களையும் பொருட்களையும் நெடுந்தீவிற்கு எடுத்துப் போவதும் குமுதினிப் படகின் நாளாந்த கடமை.நெடுந்தீவிற்கு கிடைத்த அற்புதமான சகாரப் பறவை என்பதே சரியானதாகும்.
அதிகாலை 6 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் கரையை அடைந்து பின் 8.30 மணியளவில் நெடுந்தீவிற்குச் செல்வதும் பிற்பகலில் 2 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு புங்குடுதீவு கரையை அடைந்தும் மீண்டும் மாவலிதுறைக்குச் செல்வதும் வழமை.அன்று மே மாதம் 15 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு வழமை போல் தான் விடிந்தது. குமுதினியின் காலை பயணமும் வழமை போல் தான் சுமுகமாக முடிந்திருந்தது.
சில வேளைகளில் குமுதினியை 'நேவி'சுற்றி வட்டமடிக்கும் அப்படித்தான் அந்த மே மாதம் 15 ஆம் திகதியும் அந்தப் பயணிகள் நினைத்திருப்பர்.
இரண்டு மணிக்கு புறப்பட்ட குமுதினி வழமையான கலகலப்போடு நயினாதீவு முனை வரை அமைதியாகவே பயணித்திருப்பாள். அன்று வேகமாக வந்த கடற்படைப் படகுகள் சுற்றிச் சுற்றி வட்டமடிக்கும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த கொச்சை தமிழ் பேசிய இனந்தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டது.
ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர்.
பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.
இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.
இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு.
கடுமையாக தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர்.
பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
குமுதினியாள் நொண்டியாக்கப்பட்டாள். குறையுயிரும் குற்றுயிருமாக அவள் தீவகத்தின் கடலில் பார்ப்பார் மேய்ப்பார் இன்றி அலங்கோலப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல அலையோடு அலையாகி அடித்துச் செல்லப்பட்டாள்.மனித ஓலங்கள் கடலோடு கரைந்தன.
இனவாதமும் பேரினவாதமும் நெடுந்தீவான் மீது கோர முகத்தை தன்முறையாக காட்டி இருந்தது.இறந்தவர்களின் பெயர்கள் நெடுந்தீவின் நினைவாலயத்தில் இன்றும் அழியா சுவடாய் எழுதப்பட்டுள்ளது.
எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.
35ஆண்டுகள் கடந்து விட்டாலும் நெஞ்சை பதறவைக்கும் இனவெறி தாக்குதலின் உச்சம்.எழுத்தாளரால் எழுத முடியாத துயரம் கவிஞரால் வடிக்க முடியாத கவலை எழுத்துக்களில் அடக்க முடியாத கொடுமை குமுதினி படகின் துன்ப காவியம்!
35 ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 35 ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது.