பல்வேறு மாறுபட்ட பரிணாம யுத்தங்களைக் கண்ட கோட்டையாக இலங்கையிலேயே முதன்மையான ஒன்றாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டை ஆகும். போர்த்துக்கேயர்-ஒல்லாந்தர்; ஒல்லாந்தர்-ஆங்கிலேயர்; இந்திய இராணுவம்-விடுதலைப் புலிகள்; இலங்கை இராணுவம்-விடுதலைப் புலிகள் என பல யுத்த களங்களைக் கண்டது யாழ் கோட்டை. எந்தவொரு இராணுவத்தாலும் தரை வழியாக முன்னேற முடியாத பலமான அரணாகவும் எறிகணைக் குண்டுகளுக்கு மசிந்து கொடுக்காத அகலமான சுவராகவுமே போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் மறுவடிவமாக்கப்பட்டது.
எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய யாழ்ப்பாண கோட்டை - (video) |
பல்வேறு மாறுபட்ட பரிணாம யுத்தங்களைக் கண்ட கோட்டையாக இலங்கையிலேயே முதன்மையான ஒன்றாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டை ஆகும். போர்த்துக்கேயர்-ஒல்லாந்தர்; ஒல்லாந்தர்-ஆங்கிலேயர்; இந்திய இராணுவம்-விடுதலைப் புலிகள்; இலங்கை இராணுவம்-விடுதலைப் புலிகள் என பல யுத்த களங்களைக் கண்டது யாழ் கோட்டை.
எந்தவொரு இராணுவத்தாலும் தரை வழியாக முன்னேற முடியாத பலமான அரணாகவும் எறிகணைக் குண்டுகளுக்கு மசிந்து கொடுக்காத அகலமான சுவராகவுமே போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் மறுவடிவமாக்கப்பட்டது.
நீண்டதொரு வரலாற்றினை சுமந்த யாழ்ப்பாணக் கோட்டை உருவான காலம் முதல் இன்று வரை அதன் பெருமை பேச பல கதைகள் உள்ளன. இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாண இராசதானியை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள் கோட்டையை அமைக்கும் போது சாதாரணமாகவே அமைத்தனர். 1618 ஆண்டில் போர்த்துக்கேய தளபதியான பிலிப்பே டி ஒலிவேறா யாழ்ப்பாணத்தில் இந்தக் கோட்டையைக் கட்டுவித்தான்.
அது தற்போதைய வடிவில் காணப்படவில்லை. போர்த்துக்கேயர் கட்டிய இந்தக் கோட்டை, 1658 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. இதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தத் தளபதி ரிஜ்கோவ் வான் கொனெஸின்
கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னரே, யாழ்ப்பாணக் கோட்டை இன்று காணப்படும் ஐங்கோண கட்டமைப்பைப் பெற்றது. அது மட்டுமல்லாமல் போர்த்துக்கேயர் வசம் இருந்த போது அதன் வலு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. ஆனால், ஒல்லாந்தரோ யாழ்ப்பாணக் கோட்டையை, வடிவமைப்பின் மூலமும் கட்டுமானத்தின் மூலமும் மிகுந்த வலிமையானதாக உருவாக்கினார்கள்.
யாழ்ப்பாண கோட்டையின் உள்அரண்களை முதலில் கட்டிய ஒல்லாந்தர்கள், வெளியரண்களை 18 ஆம் நூற்றாண்டிலேயே கட்டினார்கள். இலங்கையின் இரண்டாவது பாரிய கோட்டையாக கருதப்படும் பெருமையை யாழ்ப்பாணக் கோட்டைக்கு ஒல்லாந்தரே அளித்தனர்.ஒல்லாந்தரால் வளர்த்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை 1795 ஆம் ஆண்டு சுமார் 137 ஆண்டுகளின் பின்னர் ஒல்லாந்தரிடமிருந்த யாழ்ப்பாண கோட்டை ஆங்கிலேயர் வசமானது.
1795 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டான 1948 வரை, யாழ்ப்பாணக் கோட்டையில், பிரித்தானியக் கொடி ஓங்கிப் பறந்த வண்ணமிருந்தது. சுதந்திர தேசமான இலங்கையில் எண்பதுகளில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் வரை யாழ்ப்பாணக் கோட்டையின் மிடுக்கிற்கு எந்தக் குறையும் வரவில்லை.
எண்பதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதியை தமிழீழ விடுதலைப்புலிகள் தம்வசம் வைத்திருந்த போதும் கூட, இந்த யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்தது. அதன் பின்னர் இடம்பெற்ற சமர்களில் இரு தரப்பிற்கும் நடுவே சிக்குண்ட யாழ்ப்பாணக் கோட்டை கடுமையான பாதிப்பினை எதிர் கொண்டது. 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மீண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த போது, இந்தக் கோட்டையும் கைப்பற்றப்பட்டது.
கடுமையான பாதிப்பினை எதிர் கொண்ட யாழ்ப்பாணக் கோட்டையின் தோற்றம்
குருதியையும் கண்ணீரையும் காண்பதற்காகவும் வெடியோசைகளையும் அழுகுரல்களையும் கேட்பதற்காகவுமே உருவாக்கப்பட்டதோ என்று சொல்லும்படியாகச் செல்கின்றது யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாறு! இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாறிவிட்ட போதும், அங்கு நிலவும் கனத்த மௌனத்தை யாராலும் கலைத்துவிட முடிவதில்லை.