வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாக்கவும் அரசியல் தீர்வை பெறவும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும...
வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாக்கவும் அரசியல் தீர்வை பெறவும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் கட்டியெழுப்பவும் கூடிய விதத்தில் நாங்கள் செயற்படவேண்டுமானால் நாங்கள் ஒரு பலமுள்ள அணியாக பாராளுமன்றத்திறகு செல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்று மாலை மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா உட்பட மட்டக்களப்பு வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், சட்டத்தரணி ந.கமல்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன், கிழக்கு மாகாணத்திலே இரண்டு தேர்தல் மாவட்டங்களுக்கு நாங்கள் சென்று வேட்பாளர்களோடு சந்திப்புகளை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தலில் எந்த விதத்தில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும், எப்படியாக பரப்புரைகளை செய்ய வேண்டும், தேர்தல் தினத்திலும் வாக்குகள் எண்ணப்படுகின்றபோதும் புதிய நடைமுறைகள் எப்படியாக பின்பற்றப்படும், அதில் நாங்கள் மாற்றி செயற்படவேண்டிய பல விடயங்கள் பற்றி விவரமாக நாங்கள் பேசியிருக்கின்றோம்.
பரப்புரை காலத்தில் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக பல வரையறைகள் இருக்கின்றன. கூட்டங்களை நடத்த முடியாத பல சூழ்நிலைகள் இருக்கின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி மக்கள் மத்தியில் எங்களுடைய கொள்கைகளை தொடர்ச்சியாக நாங்கள் பரப்ப முடியும், மக்களை வாக்களிப்பதற்கு உற்சாகப்படுத்த முடியும் போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவாரியாக வெற்றியைப் பெற வேண்டும், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழலை மையமாக வைத்து இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாக்கவும் அரசியல் தீர்வை பெறவும் எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் கட்டியெழுப்பவும் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பட வேண்டுமானால் நாங்கள் ஒரு அணியாக ஒரு பலமுள்ள அணியாக நாங்கள் பாராளுமன்றத்திறகு செல்ல வேண்டும் என்பது நாங்கள் மக்களுக்குச் சொல்கின்ற செய்தியாக இருக்கின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்று அணி என்று கூறி ஒவ்வொருவரும் ஆசனத்தை கைப்பற்றிச் செல்வது எந்த விதத்திலும் எமது மக்களுக்கு நன்மை பயக்காது. விஷேடமாக நாடு முழுவதிலும் வித்தியாசமானதொரு ஆட்சி முறையொன்றை அமைக்கத் தொடங்குவது எங்களுக்குத் தெரிகின்றது.
விஷேடமாக கிழக்கில் இது குறித்த கரிசனை எழுந்திருக்கின்றது. தொல்லியல் சம்பந்தமாக ஒரு செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் இராணுவ ஆட்சி வெளிப்படையாகவே மேலோங்கியிருக்கின்றது. இப்படியானதொரு சூழ்நிலையிலே அவர்கள் தேர்தலிலே வெல்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் எங்களுடைய பிரதேசங்களில் நாங்கள் அதற்கு எதிராக ஜனநாயகத்திற்காக எங்களுடைய மக்களின் இருப்பிற்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுக்கின்ற ஒரு அணியாக இருக்க வேண்டும். அதிலே எங்களுடைய ஒற்றுமை பேணப்பட வேண்டும்.